யுத்த முடிவால் கிடைத்த பரிசுப் பொருள்


எமது நாட்டில் பரவலாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய இருப்பு பற்றி மிகத்த தெளிவான எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவுகள் எட்டாம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பமாகின்றன. ஆலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டைன் என்ற சரித்திர குறிப்பாளரின் கூற்றுப்படி கலீபா அப்துல் மாலிக் பின் மர்வானின் கொடுங்கோலாட்சியின் நிமித்தம் வெளியேறி முஸ்லிம்கள் பலர் 8ம் நூற்றாண்டில் கொங்கன், இலங்கை, மலாக்கா போன்ற நாடுகளில் குடியேறியதாக தெரிகின்றது. அவ்வாறு இலங்கையில் வந்து குடியேறியவர்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடமேற்கு கரையேரங்களில் எட்டு குடியேற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்ததாகவும் வரலாற்று பதிவுகள் சான்று பகர்கின்றன.

புனிதக் கருத்துக்களை நெஞ்சில் சுமந்தவர்களாக சாதி, சமயம், சம்பிரதாய சடங்கு முறைகளை விட்டும் ஒதுங்கிய அவர்கள் ஏனையவர்களுடன் ஒற்றுமையாக வாழத்தலைப்பட்டதனால் நாடு முழுவதும் பரந்து வாழக்கூடியதாக இருந்தது என்பது வரலாறு எமக்கு கற்றுத்தருகின்ற பாடமாகும். இலங்கையினை ஆட்சி செய்த மன்னர்களின் நன்மதிப்பினையும், கௌரவத்தினையும் பெற்றவர்களாக அவர்கள் தமது வாழ்க்கையின் கட்டமைப்பினை வடிவமைத்திருந்தனர் என்பதும் குறிப்பாகும்.

வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து தாய் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு சுமார் 4000 முஸ்லிம்களை செனரத் மன்னன் 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பி வைத்தான் என சான்றுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

பெரும் தொகையான முஸ்லிம்களின் குடிப் பெயர்வு அரச அணுசரணையுடன் அவ்வாறுதான் ஆரம்பமாகியது. இந்திய உபகண்டத்திலிருந்து காலப்போக்கில் வர்த்தக நோக்கிலாக ஏற்கனவே கிழக்கு பிராந்தியத்தில் குடியேறிவந்த முஸ்லிம்களின் சனச் செறிவினை மேலும் பலப்படுத்துவதன் மூலமாக நாட்டின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்த முடியும் என மன்னர்கள் நம்பிக்கை கொண்டதன் விளைவாகவே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நமது நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகமானது ஒரு தனித்துவ தேசிய இனமாக அங்கீரக்கப்படுதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் வலுவான சான்றுகள் இருப்பினும், தற்போதைய நிலமையில் அவை மிகவும் சாதூரியமாக திரிவுபடுத்தப்பட்டு மக்கள் மனங்களை நம்ப வைக்கும் ஏற்பாடுகளை பல்வேறு சக்திகளும் மேற்கொண்டு வருகின்றன. முஸ்லிம்களையும் அவர்களுடைய சந்ததியினரையும் வந்தான் வரத்தான்கள் எனக் காட்டுவதன் மூலமாக மற்றும் அவர்கள் பெரும்பான்மையினரது நிலங்களை சுரண்ட வந்த இரண்டாம் தரப் பிரசைகள் எனவும் நச்சுக்கருத்துக்களை தொடர்ந்தும் நச்சரிப்பதன் மூலமும் பெரும்பான்மைச் சமூகத்தை சார்ந்த மக்களின் மனங்களில்  வெஞ்சினங்களை நாற்றிடுதற்கு ஒரு சில பெருந்தேசியவாதங்கள் கடும் பிரயத்தனங்களை செய்துவருகின்றன.

படுமோசமான, மூர்க்கத்தனமான, தான் தோன்றித்தனமான முடிவுகளால் திசைமாறிப் போன ஒரு சாரரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள அரசு அதனால் கிடைக்கப்பெற்ற களிப்பையும், ஆனந்தத்தினையும் அதனால் உருவான அமைதி நிறைந்த வாழ்க்கையினையும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சாரருக்கு மாத்திரம் உரித்தாக்கிவிட்டதா என்ற சந்தேகம் இன்று வலுவடைந்து வருகின்றது. மழை விட்டாலும் துவானம் விடாத நிலமை சிறுபான்மை சமூகங்களின் பிரதேசங்களில் நிலவுகின்றதை யாரும் மறுத்துவிட முடியாது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் கொப்புகளுக்கும் இந்த விசித்திரமான காலநிலை ஒருபோதும் புரியப்போவதுமில்லை.

பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தின் நிமித்த காரணிகளாக ஆரம்பத்தில் தமிழையும் பின்பு தமிழ் பேசும் மக்களின் நிலங்களையும் அடையாளப்படுத்திக் கொண்ட பெருந்தேசிய கடும்போக்கு வாதிகள் தங்களது போருக்கு ஒத்துழைப்புத் தராதவர்கள் அனைவர் மீதும் துரோகிகள் என்ற முத்திரயை பதித்துவிட்டனர். யுத்தத்தின் முடிவில் தமக்கு கிடைத்த பரிசுப்பொருட்டகளில் ஒன்றாக தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலங்களும் அடங்கிவிட்டது என்ற போக்கிலான நடைமுறையினை நாம் தற்போது அவதானிக்கின்றோம். அதனை எண்பிக்கும் வகையிலான அவசர அவசரமான சம்பவங்கள் கிழக்கில் இன்றைய நாட்களில் கட்டவிழ்ந்து அச்சமூட்டுகின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்பன 01.10.1833 ல் கோல்புறூக் - கமரூன் சீர்திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட போது மொத்தமாக 18>052 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பினை கொண்டிருந்தன. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் 4431.4 சதுர கிலோ மீற்றரையும், மட்டக்களப்பு மாவட்டம் 2633.1 சதுர கிலோ மீற்றரையும், திருமலை மாவட்டம் 2728.8 சதுர கிலோ மீற்றரையும் கொண்டிருந்தன. கிழக்கு மாகாணத்தின் மொத்த சதுர பரப்பளவு 9803.3 சதுர கிலோ மீற்றராக இருந்தது. காலப்போக்கில் மாவட்டங்களின் எல்லகைள், பிரதேச சபைகளின் எல்லைகள் என்பன பெரும்பான்மை சமூகத்தின் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றவாறு உருமாற்றம் பெற்றன.

1963ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது அன்றிருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள் மொத்தமாக 5.8 சதவீதமான சிங்கள மக்களே வாழ்ந்து வந்தனர். ஆனால் புதிய அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது அண்டைய மாவட்டங்களின் நிலப்பரப்பும், குடிசனப்பரம்பலும் புதிதாக சேர்க்கப்பட்டு மொத்தமாக சிங்களவர்களின் தொகை 29.3 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

அதேபோன்று, 259 சதுர மைல் பரப்பளவுகொண்ட சம்மாந்துறைப்பற்று இரண்டாக பிரிக்கப்பட்ட போது, 6585 பேரைக் கொண்ட பெரும்பான்மை சிங்கள சமூகத்து மக்களுக்கான வேவகம்பற்றிற்கு 260 சதுர மைல் பரப்பளவு கொடுக்கப்பட்ட அதே வேளை 4>00704 பேரைக்கொண்ட தமிழ் பேசும் மக்களுக்கான சம்மாந்துறைப்பற்றிற்கு வெறும் 99 மைல் மட்டுமே பிரித்துக் கொடுக்கப்பட்டது. மக்களின் ஆலோசனைகளின்றி ஒருதலைப்பட்சமாகவும், அவசர அவசரமாகவும் அரசியல் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட புதிய பிரதேச சபைகளுக்கான எல்லைக் கோடுகள் யதார்த்தமானதாக அப்போது வரையறுக்கப்படாமையால் அம்பாறை மாவட்டத்திலுள்ள சில சபைகளுக்கிடையில் இன்றும் எல்லைப்பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே வருகின்றன. பல்வேறு பரிமாணங்களில் பெரும்பான்மை சமூகத்தினரால் அவ்வப்போது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற விஸ்தரிப்புவாதம் இலகுவாக நிறைவேற்றப்படுதற்கு தீராத இவ்வெல்லைப்பிணக்குகள் துணைபோகின்றன.

இவை போன்ற ஈனச்செயலினால் புதிதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இறக்காமம் பிரதேச சபையானது மிக அண்மையில் பாதிக்கப்பட்டுள்ளது. 1942ம் ஆண்டிலிருந்து தனியான சனிட்டரி தளமாகவும், 1947லிருந்து கிராம சபையாகவும் தனியான எல்லைகளை கொண்டிருந்து வந்த இறக்காமம் பிரதேசம் பின்னர் 1987 ம் ஆண்டிலிருந்து நிருவாக ரீதியாக சம்மாந்துறை பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டது.      

தற்போது தனியான ஒரு பிரதேச சபையாக பிரித்தெடுக்கப்பட்ட போது எவ்வித தொடர்புமற்ற அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, தமண பிரதேச சபைகள் இறக்காமத்திற்குரிய எல்லைப் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களை சுரண்டியது மட்டுமல்லாமல் இந்த சுரண்டலுக்கு பதிலாக தமண பிரதேசத்திலுள்ள ஒரு சிறிய நிலப்பரப்பை இறக்காமத்துடன் இணைத்துவிட்டிருந்தனர். இந்நடவடிக்கை அவர்களுடைய பெருந்தன்மையினை காட்டுவதாக வெளிப்படையாக தோன்றினாலும் இணைக்கப்பட்ட அக்குறிப்பிட்ட நிலப்பரப்பினூடாக கணிசமான சிங்கள வாக்காளர்கள் இறக்காம பிரதேச சபைக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. 1963ல் புதிய அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட வேளை எவ்வாறான உக்திகளை கையாண்டு பெரும்பான்மை மக்களும், நிலமும் புதிய மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதுவோ அதேபோன்றே ஒரு யுக்தி முறையினை கொண்டு இறக்காமம் பிரதேச சபை உருப்பெற்றுள்ளது. பெரும்பான்மையினரது சுயநலம் காக்கும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் நிருவாக அமைப்பு பண்டுதொட்டு அங்கு மையங்கொண்டுள்ளது எனக் கூறலாம்.

கிழக்கு மாகாணத்தில் காலாகாலமாக காடுகளை வெட்டி வியர்வை சிந்தி விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த தமிழ் பேசும் மக்கள் தங்களது நிலங்களிலிருந்து கடந்த அரை நூற்றாண்டு காலமாக பல்வேறு கட்டங்களாக விரட்டப்பட்டுக் கொண்டு வந்துள்ளனர்.

விவசாயம், நீர்ப்பாய்ச்சல் தொடர்பான திட்டங்களுக்காக பலாத்காரமாக சுவீகரிக்கப்பட்ட காணிகள் சொந்தக்காரர்கள் சிறுபான்மை சமூகத்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு மாற்றுக் காணிகளோ நட்ட ஈடுகளோ வழங்கப்படவில்லை. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் யுத்த சூழலின் போதும் தங்களது காணிகளில் இருந்து வெளியேறியுள்ளனர். திட்டமிட்ட இனச்சுத்திகரிப்புக்குள்ளாகி வடக்கில் பாரிய அளவிலும் கிழக்கில் ஆங்காங்கே சொரியலாகவும் அவர்கள் வெளியேறியுள்ளனர்.

பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட காணிச் சேரிகளில் அவர்களது உரிமைப்பத்திர ஆவணங்கள் கூட பறித்தெடுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.

வன இலாகாவின் நடவடிக்கைகள், புதைபொருள் ஆராய்ச்சி மற்றும் புனித நகர் திட்டம் என்ற போர்வைகிளிலும் இவ்வாறான கொடுமைகள் நிறைவேறிய வண்ணமுள்ளன.

இதனாலேயே பயங்கரவாதம் வியாபித்திருந்த வேளைகளில் இழந்த காணிகளை மீளளிக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது நீதியும் நியாயமும் கடைப்பிடிக்கப்படவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.

அபிவிருத்தி திட்டங்கள், மீள்குடியேற்றங்கள் போன்றன அமுல் நடாத்தப்படும் போது அவற்றினைக் கையாளுபவர்கள் எவ்வாறு கோடீஸ்வரர்களாக மாறினார்களோ அதே போன்று நிலம்களை மீளளிக்கும் விவகாரத்தை கையாளுபவர்கள் நிலச்சுவாந்தர்களாக மாறுவதற்கான அறிகுறிகள் இப்போதிலிருந்தே தென்படத் தொடங்கியுள்ளன.


அம்பாரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 16>764 ஏக்கர் நிலம் முஸ்லிம்களால் கைவிடப்பட்டுள்ளது.
பொத்துவிலிலிருந்து 730 பேர் இழந்துவிட்ட 2592 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்றிலிருந்து 660 பேர் இழந்துவிட்ட 1785 ஏக்கர் காணிகளை பற்றி முறைப்பட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனையிலிருந்து 329 பேர் இழந்துவிட்ட 1072 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
ஒலுவில் மற்றும் பாலமுனையிலிருந்து 176 பேர் இழந்துவிட்ட 559 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
நிந்தவூரிலிருந்து 583 பேர் இழந்துவிட்ட 2349 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறையிலிருந்து 529 பேர் இழந்துவிட்ட 2513 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
இறக்காமத்தில் இருந்து 428 பேர் இழந்துவிட்ட 2092 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
கல்முனையிலிருந்து 280 பேர் இழந்துவிட்ட 1433 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
மருதமுனையிலிருந்து 429 பேர் இழந்துவிட்ட 2365 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
மொத்தமாக அம்பாரை மாவட்டத்தில் இருந்து 4211 பேர் தாம் இழந்துவிட்ட 16>764 ஏக்கர் காணிகள் பற்றி முறைப்பட்டுள்ளனர்.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 5475 பேருக்குரிய 28>813 ஏக்கர் நிலம் பறிபோயுள்ளதாக முறைப்பாடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் 5186 பேர் சம்மபந்தமாக 17>092 ஏக்கர் காணிகளை முஸ்லிம்கள் இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களினாலும், கிழக்கு மாகாண சபையினாலும் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தர முடியாதுள்ளன. இவற்றின் அதிகாரங்களை வெற்றுத்தகர டப்பாக்களிலிருந்து வெளிவரும் வெறுமையான சத்தங்களுக்கு மட்டும்தான் ஒப்பிடமுடியும்.

பொத்துவில் கறங்கோவா காணிப்பிரச்சினைகள் மற்றும் காணியற்றவர்களுக்கு காணிகள் வழங்கும் போர்;வையில் காணி ஆணையாளரினால் வெளியிடப்பட்ட பிழையான விளம்பரத்தினை இரத்தாக்கும் விடயம் பரிந்துரைக்கப்பட்ட போது கூட மத்திய அரசினால் அவை தூக்கி வீசப்பட்ட சம்பவங்களினையும் நாம் இங்கு மறந்துவிட முடியாது.

யுத்தத்தினாலும், சுனாமி அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணியற்றவர்களுக்கு காணிகள் வழங்குவது தொடர்பாக ஒரு பகிரங்க விளம்பரம் பத்திரிகைகளில் மாகாண ஆணையாளரினால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருந்தது.

விண்ணப்பதாரிகளுக்கு இருக்க வேண்டிய தகமைகள் என இவ்விளம்பரத்தில் குறிப்பிடப்படடிருந்த நிபந்தனைகள் பொதுவாக சிறுபான்மை சமூகத்தினரையும் குறிப்பாக வடக்கு கிழக்கில் யுத்தத்தினாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தையும் திட்டமிட்டு பழிவாங்குவதற்காகவே உள்ளடக்கப்பட்டனவா என்ற சந்தேகத்தை கிழப்புகின்றது.

'எரிகின்ற வீட்டில் பிடுங்கியதெல்லாம் இலாபம்' என்பது போல அழிவுக்குள்ளான வடக்கு கிழக்கு மண்ணில் எஞ்சியுள்ள நிலப்பரப்பை எவ்வாறாவது அபகரித்துப் பெரும்பான்மையினருக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற அவசரமும், ஆசையும் அந்த விளம்பரத்தின் நிழலாக காணப்பட்டது.

சென்ற வருடம் அக்டோபர் மாதம் 20ம் திகதி, அம்பாரை கச்சேரியில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில், சமூகமளித்திருந்த அமைச்சர்கள் பலரும், கிழக்கு மாகாண ஆளுனரும், முதலமைச்சரும் கூட இவ்வாறான வழுக்களை சுட்டிய கோரிக்கைகளை நியாயமானது என ஏற்றுக்கொண்டிருந்தனர். எனிலும், அத்தீர்மானங்கள் மத்திய அரசிலுள்ள கடும்போக்குவாத அதிகாரிகளின் குப்பை கூடைகளை நிரப்புவதற்காகத்தான் பயன்பட்டன. சிறுபான்மை சமூகத்தின் காணிப்பிரச்சினைகள் அம்பாறை மாவட்டத்தில் கிடப்பில் போடப்படுவது ஒரு மாமூலான நடைமுறையாகும்.

தற்போது இந்த பிழையான ஒரு தலைப்பட்சமான விளம்பரத்தின் அடிப்படையில் கோரப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் உள்ள பிரதேச செயலக காரியாலயங்களில் உள்ள கோவைகளில் தூங்கி வழிகின்றன.

அரச நிலங்களை தாராளமாக கொண்டுள்ள பிரதேசங்களிலிருந்து விண்ணப்பித்த பெரும்பான்மை சமூகத்தினர் காணி ஆணையாளரினது கருணையினால் பயனடைந்துவருகின்றனர்.

சம்மாந்துறை கரங்காவட்டை பிரதேசத்தில் பயங்கரவாத பிரச்சினை காரணமாக முஸ்லிம்களினால் கடந்த காலங்களில் கைவிடப்பட்ட சுமார் 420 ஏக்கர் காணியை பெரும்பான்மை இனத்தினர் இப்போது கைப்பற்றிக் கொண்டுள்ளனர். இந்த காணி அபகரிப்புக்கு பக்கபலமாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடந்துகொள்வதாக காணி சொந்தக்காரர்கள் முறைப்படுகின்றனர். மேலும், வேலியே பயிரை மேய்வது போலாக பாதுகாப்பு உத்தயோத்தர்களும் முஸ்லிம் மக்களின் காணிகளை அத்துமீறி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மாவட்டத்தின் குடிசனப்பரம்பலின் இன விகிதாசாரத்திற்கு ஏற்றவாறு அங்குள்ள அரச காணிகள் எல்லா சமூகத்தினருக்கும் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்ற மனநிலை பெரும்பான்மை சமூகத்திற்கு ஏற்படாதவரை இந்நாட்டில் சமாதானமும் சகவாழ்வும் என்றுமே அடையமுடியாத, விடைகாண இயலாத கேள்விக் குறியாகவே இருக்கும்.  

புள்ளி விபரங்கள் யாவும் கிழக்கு மாகாண காணிகள் தொடர்பாக தமிழர் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் கடந்த வருடம் 2009 அக்டோபர் மாதம் 23ம் திகதி பாராளுமன்ற ஒத்தி வைப்பு வேளையில் சமர்ப்பித்த பிரேரணையை வழி மொழிந்த ஹஸன் அலி எம்.பி.யின் உரையிலிருந்து திரட்டப்பட்டது.                                                                                                                                                                                               
Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger