கொண்ட வட்டுவானில் கோபுரத்துடன் ஒரு பள்ளி...

சம்மாந்துறைப் பெண்ணாள் எனும்
என் தாய் மண்ணின்...
கூந்தல் கோரி கொண்டை முடிய
ஊவா வெல்லஸ்ஸ பரணகம எனப் பரந்து
மலையும் காடும் என வாரி முடிந்து
கொண்டை வட்டுவானில் கோரி முடிய வேண்டும்....


அவள் கூந்தலில் விழுந்த மழைப்பால்
உருண்டு திரண்டு மதுரமாகி
இங்கினியா கலை எனும் மார்பில் தேங்கி
பட்டிப்பளை எனும் முலைக்காம்பினூடே
அமுதூட்டி பசிபோக்கி அரவணைத்தாள்
சம்மாந்துறை வேவகம்பற்று எனும் எம்பெருநிலத்தை.....

காலம் உருண்டோடிக் கயவர்கள் கண்குத்திக்
கூந்தல் முதற்கொண்டு வயிறுவரை
நம் தாயைச் சிறைபிடித்து
நமக்கே எல்லை இட்டார்...பாவம்....

போசாக்கு குறைந்து மந்த புத்திக் குழந்தைகளாய்
மாரி பார்த்து மழையைநம்பி
நாற்றுப் போடும் நாதாரிக் கூட்டமாயும்
நேரம் குறித்து அளவு பார்த்து தண்ணி திறக்க
அந்த மூத்திரத்தில் கரப்புக் குத்தி
விரால் பிடித்துப் பிடரி முறிக்கும்
போடி மார்களாயும் நாம்......இருந்துவிட்டோம்....

உள்ள மாட்டுக்குள் உரிய மாடறுத்து
உண்டு உரம் செய்த உழவர் கூட்டம் நாம்...
எருது பூட்டி ஏர் இழுத்து
எருது கொண்டே எம்மரமும் இழுத்து
வண்டி கட்டி வரலாறு படைத்த
மறவர் கூட்டம் நாம்....
மறந்து போனோம் நம் வரலாறு....

பட்டிப்பளை நீர் கொண்டு
பல் துலக்கி முகம் கழுவி
நீராடி நிலம் விதைத்து
பேரோடு வாழ்ந்த நாம்தான்
பட்டிப்பளையின் மூத்த பிள்ளைகள்...

பட்டிப்பளயாறும் அதன் நீரும் எமக்குத்
தாயும் தாய்ப்பாலும்.....

சென்ற போகமொன்றில் நடந்த கொடுமை ஓன்று
கேள்விபட்டேன் உம்மா....நெஞ்சு வெடிக்கின்றது...
நம் நிலத்துப் பயிர்கள் எல்லாம்
பசி கொண்டு பால் கேட்க
முலை தூக்கி விருப்போடு
பாலூட்ட வருகையிலே....

அவள் சுரந்த பாலை கொடுக்க மறுத்த
கொடும்பாவி மனிதர்கள் புரியும் சதியால்
பயிர்கள் இறந்து பாழாய்ப் போன
பரிதாபமொன்றும் நடந்துவிட்டதாம்....

பண்டாரத் தீவிலும் பதியத் தளவாயிலும்
உஹன மகா ஓயாவின் காடுகளிலும்
களனி கண்டு கால்நடை மேய்த்து
கருக்கொண்டு காலம் தள்ளிய முன்னோரின்
வேவகம்பற்று எனும் நமது தாய் மண்ணின்
வளம் நுகர வழியற்று வாழ்விழந்த கதை
வரலாறே நீ மறந்தாயோ....!

செத்தது பயிர்களல்ல...
நம் நிலத்தின் மானமும் ரோஷமும்...
நம் வீரமும் விவேகமும்......
ஒற்றுமை அற்று விமர்சனம் கூடி
பொறாமை எரிச்சல் எல்லாம் சேர்ந்து
சீரழிந்த சமூகமாய் இன்று நாம்.....

சாதிக்கும் வெறி நமது மக்களிடம் இல்லை
தட்டிக் கொடுக்கும் தாராளமும் இல்லை.....

வீரம் என்பது விமர்சனம்தான் என
விவாதிக்கும் வீணர் கூட்டம்
விடியலைத் தேடி வெளிச்சத்தில் அலைகின்றார்....

பட்டிப்பளை என்னும் நாம் தாயை
கோம்பை மட்டையும் ஓலையும் இளக்கி
மாடும் ஆடும் இன்னும் பிறவும்.....சுகிக்கட்டும் என
கொளனிகளில் கால் கழுவ விட்டுவிட்டு ...

நம் குடலைப் பயிர்களை நீரின்றிக் கொல்ல
நாம் என்ன சூப்பி மிட்டாய் வீரர்களா....?
வெறிகொண்டு போராட மனமிங்கு நினைக்கின்றது
பறி கொண்ட எம் நிலத்தின் பவிசுகள் எல்லாமே
தறிகெட்ட மூடர்கள் தத்துக் கொடுத்தாரோ....
அறிவேன்...அறிவேன்....எம்வரலாறு
பின்னர் துணிவேன்...துணிவேன்......புது வரலாறு...
நான் கொண்ட லட்சியங்கள் பல
அதிலே இதுவும் ஓன்று.....
கொண்டவட்டுவானில் ஒரு பள்ளி கோபுரத்துடன் அமைப்பது .........


நன்றி முகம்மத் சனூஷ்
( கடந்த மகா போகத்தில் நீரில்லாமல் இறந்து போன என் மக்களின் உயிர் நாடியான வெள்ளாமைகளை நினைத்து வேதனையுடன் எழுதப்பட்டது......)
Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger