ஒலுவில் துறைமுகத்துக்காய் காணியை இழந்த மக்களுக்கு நிவாரணம் கிட்டுமா?

ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கென 2008ம் ஆண்டு இரண்டாம் கட்டமாக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நஸ்டஈட்டுத் தொகை சுமார் 5 வருடங்களாகியும் இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்க இடமின்றியும், வாழ வழியின்றியும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களது தற்போதைய நிலைமைகளை ஆராய்கின்ற போது பாரிய அநீதி இழைக்கப்பட்டு அவர்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய நஸ்டஈட்டுத் தொகை வழங்கப்படாமல் மறுக்கப்படுமோ என்ற சந்தேகம் பிரஸ்தாப பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஸ்டஈட்டை பெற்றுக் கொடுப்பதில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் முதற் கொண்டு மக்கள் பிரதிநிதிகளும் மிகக்கூடிய கவனமெடுத்து தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஆவண செய்யப்பட வேண்டும் என்பதே இன்று பாதிக்கப்பட்டோரால் முன்வைக்கப்படும் கோரிக்கையாகும்.

இதுவிடயமாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது உள்ளக் குமுறல்கள் மற்றும் இன்றைய நிலை சம்மந்தமாக தெரிவித்த கருத்துக்களை இங்கு தொகுத்து தருகிறோம்.
காணிச் சுவீகரிப்பினால் பாதிக்கப்பட்ட எம்.ஐ.எம். அன்சார் என்பவர் கூறும்போது,


"ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்காக இரண்டாம் கட்டமாக 2008ம் ஆண்டு 48 போர்களின் காணிகள் சட்டப்படி சுவீகரிக்கப்பட்டன. சுவிகரிக்கப்பட்ட காணிகளுக்கு 2009ம் ஆண்டு அரச விலைமதிப்புத் திணைக்களத்தினால் விலை மதீப்பீடு செய்யப்பட்டன. அதில் பாதிக்கப்பட்ட 48 பேரில் எனது காணித்துண்டு உட்பட 32 பேரின் காணிகளுக்கு (11.18 ஹெக்டெயர்) மட்டுமே விலைமதிப்பீடு செய்யப்பட்டது."
"அதன் பிற்பாடு காணி உரிமையாளர்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரினால் நஸ்டஈட்டுத் தொகை எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 32 பேர்களுக்கும் இலங்கை துறைமுக அதிகார சபையினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஊடாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு 22 கோடியே 70 இலட்சத்து 97 ஆயிரத்து 460 ரூபா வழங்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் மேற்படி காணிகளுக்குரிய அரச விலை மதீப்பீடு அதிகூடியது என்ற யூகத்தின் அடிப்படையில் இதனைக் காரணம் காட்டி இலங்கைத்துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகளினால் இழுத்தடிக்கப்படுகின்றன."


பாதிக்கப்பட்ட குழுவினரால் இவ்விடயமாக இலங்கைத் துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகளிடம் வினவியபோது, அரச விலை மதிப்பீட்டுத் தொகை அதி கூடியது என்றும், அதனை வழங்குவதற்கு இலங்கைத் துறைமுக அதிகார சபையிடம் பணமில்லை என்றும் இவ்விடயம் சம்மந்தமாக ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கை கிடைத்தவுடன் நஸ்டஈடு வழங்குவது சம்மந்தமாக மேற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் சுமார் 105 பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தீர்வு கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எங்களது விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் மனம் நொந்த நிலையில் இவ்விடயத்தில் விமோசனம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் உள்ளனர். மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் கூட அவர்கள் இதுவரையில் மௌனிகளாய் இருப்பது மனவேதனையைத் தருகிறது. இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் மனித நேயத்துடன் நடந்து கொள்ள தவறி விட்டார்கள். பல நொண்டிச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இன்னும் நியாயமற்ற காரணங்களைக்கூறி காலத்தைக் கடத்துவது நாகரீகமற்ற செயலாகும்.


தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒலுவில் துறைமுகமும் மிக விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது. அதற்கு முன் எமக்குரிய தீர்வினை நாட்டின் தலைவரும் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜனாதிபதி அவர்கள் விரைவில் பெற்றுத்தந்து எமது துயர் துடைப்பார் என நாங்கள் நம்புகிறோம்.
மற்றுமொரு பாதிக்கப்பட்ட மசாயினா உம்மா என்ற பெண் (வயது-65) தனது கருத்தை வெளியிடும்போது,


"எனக்கு 5 பெண் பிள்ளைகள் உள்ளனர். ஒலுவில் துறைமுக வேலைக்காக எமது காணிகள் சவீகரிக்கப்பட்ட பிறகு எமது குடும்பத்துடன் சம்மாந்துறையில் வசித்து வருகிறோம். அடிப்படை வசதிகளற்ற களிமண் வீடு ஒன்றில் மிகச் சிரமத்திற்கு மத்தியில் நானும் எனது குடும்பமும் வசித்து வருகிறோம். நாங்கள் எமது ஒலுவில் காணியில் 40 வருட காலமாக வசித்து வந்தோம். அப்போது எனது கணவர் கூலித்தொழில் செய்து எங்கள் குடும்பத்தை நடாத்தி வந்தார். தற்போது வயது முதிர்ந்த நிலையில் வாழ்க்கையை ஓட்டுவது பெரும் சிரமமாக உள்ளது. பல வருசம் கடந்தும் எமது காணிகளுக்கான நஸ்டஈடு கிடைக்கவில்லை. இதில எங்கட துயரைத் துடைக்கிறதுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறுதான் நாங்க இப்ப கோரிக்க விடுக்கிறம்" என்று கூறினார்.
அதுபோல் மற்றொரு பாதிக்கப்பட்ட நபர் எம்.ஐ.மீராமுகைதீன் (வயது 50) கூறும்போது,


"எங்கட காணிகள ஒலுவில் துறைமுகத்த கட்டுறதுக்காக கேட்டாங்க. நாங்களும் அரசாங்கம் எடுத்தா நஸ்டஈடு தருவாங்கதானே எண்டு நம்பி காணிய நாட்டின் அபிவிருத்திக்காக கொடுத்தம். சுமாரா 5 வருசகாலம் போயிட்டு, நாங்களும் இப்ப வரும் அப்ப வரும் எண்டு காத்துக்கிட்டு இருக்கம். எங்கட குடும்பத்துல் 6 பேர் நாங்க எப்படி வாழ்றது? எங்கட காணியுமில்ல, காசும் இல்ல. அரசாங்கத்த நம்பி ஏமாந்த நிலைதான் எங்களுக்கு இப்ப மிஞ்சி இரிக்கி. சொல்லப்போனா எங்கிட நாளாந்த வாழ்க்கைய நடத்துறதிற்கு கடன் வாங்கிகிட்டு வாழ்றம். எங்களுக்கு சேர வேண்டியத தந்தா நாங்க எங்கட வாழ்க்கையையும் சிறப்பாக்கிகிட்டு, ஒரு தொழிலையும் செய்யலாம். பெரும் கஸ்டமா இருக்கி. சம்மந்தப்பட்டவங்க மனம் இரங்கி எங்கட விசயத்த கவனத்தில கொள்ளனும் எண்டுதான் நாங்க விரும்புறம். என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்."

மற்றொரு பாதிக்கப்பட்ட பெண் எம்.எஸ். செயிலத்தும்மா (வயது 60) குறிப்படும்போது,


"எனக்கு உரித்துடைய சுமார் 1280 பேர்ச்சஸ் (8 ஏக்கர்) காணி சுவீகரிக்கப்பட்டது. எனக்கு திருமண வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். நான் தற்போது காத்தான்குடியில் உறவினரின் வீட்டில் வசித்துவருகிறேன். எனக்கு நிரந்தரமான வீடு வளவு எதுவுமில்லை. எனக்குரித்தான நஸ்டஈடு கிடைத்தால் எனது பிள்ளைகளுக்கு வீடுகளை கட்டி அவர்களை கரை சேர்க்கலாம். ஆனால் சுமார் 5 வருட காலமாகியும் இன்னும் நஸ்டஈடு கிடைக்காமை மிகவும் மனவேதனையளிக்கிறது. இது சம்மந்தமாக எங்களுடைய பிரதேச செயலாளரிடம் கேட்டால் எல்லாம் அனுப்பப்பட்டுள்ளது பணம் கிடைத்தால் தருகிறோம் என்று சொல்கிறார். இந்த விடயத்தில் யாரெல்லாம் தடையாக இருக்கிறார்களோ அவர்களின் மனங்களில் இறைவன் இரக்கத்தன்மையை கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான யு.எல். உதுமாலெப்பை (வயது 55) என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

"எனது ஒலுவில் காணி சுவீகரிக்கப்பட்ட பிற்பாடு மத்திய முகாமிற்குச் சென்று வாழ்ந்து வருகிறேன். எனக்கு நிரந்தர தொழிலும் இல்லை. வருமானமும் இல்லை. ஒலுவிலில் இருக்கும்போது கடற்றொழில் செய்தேன். எனக்கு அப்போது கஸ்ட நிலை பெரிதாக இருக்கவில்லை. காணி சுவீகரிக்கப்பட்ட பிறகு மிகவும் கஸ்டமான நிலையில் இருக்கிறேன். எனது குடும்பத்தில் 5 பிள்ளைகள் உண்டு. அதில் இருவர் பாடசாலை செல்கிறார்கள். கஸ்டமாக இருக்கிறது. இதுவரைகாலமும் இவ்விடயமாக நாங்கள் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் செய்யாமல் மிகப் பொறுமையுடன் இருந்து வருகிறோம்."
ஒலுவில் துறைமுகம் நிர்மாணித்ததன் பிற்பாடுதான் ஹம்மாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால், ஹம்மாந்தோட்டையில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய சகல நஸ்டஈடுகளும் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? நாங்களும் இந்த நாட்டு மக்கள்தானே.


எமது அரசியல் பெருந்தகைகளிடமும் பலமுறை இந்த விடயத்தை சொல்லியிருந்தும் அவர்களாலும் இதுவரையும் காத்திரமான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. தேர்தல் காலங்களில் மட்டும் உரிமை கடமை என்று வாய்கிழியக்கத்திவிட்டு எங்களுடைய பிரச்சனைகளை தெரிவிக்கும்போது கோளைகளாக ஓடி ஒழிந்து கொள்கின்ற அரசியல் வாதிகளே எமக்கு கிடைத்திருக்கும் முதல் சாபக்கேடாகும். என்றும் கூறுகின்றார்.
இதுவிடயமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரை பலமுறை முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் காணிப்பகுதியின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.எம். றிபாய் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இந்த விடயம் தொடர்பாக பின்வரும் கருத்தை கூறினார்.

அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு,

ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கென 2008ம் ஆண்டு இரண்டாம் கட்டமாக சுவீகரிக்கப்பட்ட 48 பேர்களுடைய காணிகளின் பரப்பு 20.1798 ஹெக்டெயர் ஆகும். (49.84 ஏக்கர்) இக்காணிகளுக்குரிய விலைமதிப்பீடு 2009ம் ஆண்டு அரச விலை மதிப்பீட்டுத்திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 32 பேர்களின் காணிகளுக்குரிய நஸ்டஈட்டுத் தொகையாக 22 கோடியே 70 இலட்சத்து 97 ஆயிரத்து 460 ரூபா வழங்கவேண்டி உள்ளது. விலை மதிப்பீடு செய்யப்பட்ட 32 பேருக்குரித்தான மேற்படி நஸ்டஈட்டுத் தொகையை அனுப்புவதற்கு ஆவண செய்யும்படி இலங்கைத்துறைமுக அதிகார சபையின் உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எமக்கு இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தால் செய்யப்பட்ட விலை மதிப்பீடு அதிகூடியது என காரணம் காட்டியே இதுவரை நஸ்டஈட்டுத் தொகை வழங்கப்படாமல் தாமதிக்கப்படுவதாகவே கருதவேண்டி உள்ளது. நாங்கள் இதுவிடயமாக சகல ஆவணங்களையும் உரிய இடங்களுக்கு அனுப்பியுள்ளோம். தாமதிக்கப்படுவதற்கு நாங்கள் காரணமில்லை. நஸ்டஈட்டுத்தொகை கிடைத்ததும் உரியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். விலை மதிப்பீட்டினை இலங்கை துறைமுக அதிகார சபை ஏற்றக்கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டதனாலேயே எஞ்சிய 16 பேர்களின் காணிகளுக்கு இதுவரையில் விலை மதிப்பீடு செய்யப்படவில்லை. என்று கூறினார்.
ஒலுவில் பிரதேசத்தில் இருந்து துறைமுக அபிவிருத்திக்காக தங்களது காணிகளுடன் வீடு உடைமைகளை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதென்பது அரசியல் வாதிகள் முதற்கொண்டு, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அணைவரினதும் முதன்மைக் கடைமைகளில் ஒன்றாகும்.

சி.சந்திரகாந்தன் என்ற பந்து இரண்டு விக்கட்டுகளை சாய்த்திருக்கிறது


நிந்தவூரின் அரசியலில் இன்று குறிப்பிடத்தக்க ஒரு நாள். மக்களின் அரசியல் அபிப்பிராயமானது வேறு திசையில் மாற்றம் பெறுவதற்கு சற்று முந்தியகாலம் இதுவென சந்தேகிக்க வழிவகுத்துள்ள ஒரு நாள்.

நடந்தது கிரிக்கட் என்றாலும் வெறும் கிறிக்கட் என்று கூறிட முடியாத அளவிற்கு கொஞ்சம் அரசியலின் வாடையும் கூடவே பெட்டும் பந்துமாக சேர்ந்திருந்தது. என்றாலும், இந்தக் கிரிக்கட் பலருக்கு படிப்பினை கொடுத்திருக்கும் என்பது என்னவோ உண்மைதான். நிந்தவூரில் இன்று இடம்பெற்று முடிந்த கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு கிழக்கு மகாண சபையின் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். அவரது அரசியல் காலத்தில் முதல் முறையாக இந்த நிந்தவூருக்கு வருகை தந்திருக்கிறார் என நினைக்கின்றேன். என்றாலும் இவ்வருகை மக்கள் மத்தியில் அவர்கள் இதுவரை காலமும் வைத்தருந்த குருட்டுத்தனமான அரசியலுக்கு மறைமுகமாகவாயினும் சிறிது மருந்து கட்டலாம் என்பது சிலரது கருத்து.

நிந்தவூரில் எதற்கு எடுத்தாலும் அழைக்கப்படுவதற்கும், மண்ணின் மகிந்தர் என்றும், தன்மான சிங்கம் என்றும் போற்றப்படுவதற்கும் என்றிருந்த இரண்டு எம்பிக்களை இந்த நிகழ்வில் காணமுடியாமல் போனதற்கு இந்த மக்கள் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள் என்றுதான் நான் கூறவேண்டும். நீங்கள் எல்லோரும் ஏன் என்று கேட்கலாம். மக்கள் கேட்பது ஒன்Nறு ஒன்றுதான். இந்த இரண்டு எம்பிக்களும் ஊருக்கோ அல்லது இந்த நாட்டிற்கோ செய்தது என்ன? தயவு செய்து அவர்களுடைய குடும்பத்திற்கு செய்தவைகளை கூற வேண்டாம் என அம்மக்களே கூறுகிறார்கள் நான் அல்ல. இதுததான் நானும் இந்த ஊரில் இத்தனை நாளும் செவியுண்ட வினாக்கள். இதற்கான விடை எனக்கும் தெரியாது. உங்களுக்கு தெரிந்தால்...

மடத்தனமாக அரசியலை நெருப்பாக மக்கள் மத்தியில் மூட்டிவிட்டு குளிர் காய்ந்ததை விடுத்தும், மக்கள் மனங்களில் மரம் என்ற சின்னத்தை விதைத்து  மடங்களாக மாற்றியதை விடுத்தும், அரசியல் என்பது குடும்பங்களுக்குள் மாத்திரம் சுற்றித்திரிய அக்கரையாக செயற்பட்டதனை விடுத்தும், தேர்தல் என்றால் மக்கள் மடையர்களாக மாறவேண்டும் என்று பள்ளிக்கூடம் நடத்தியதனை விடுத்தும், அபிவிருத்தி என்பதனை தொட்டு நக்கும் தேனாகவும், வோட்டு என்பது காசுக்கும் ஒரு போத்தல் சாராயத்திற்கும் போடும் வெறும் கோடு என்றதனைவிடுத்தும், தெருவோரங்களில் கட்சி கந்தோருகள் அமைத்து காடையர்களை உருவாக்கியதை விடுத்தும், தலவைன் என்பவனுக்கு வெறும் தலை இருந்தால் போதும் என்று மக்களுக்கு மகுடி ஊதியதனை விடுத்தும், சேவை என்பது சாவு நடந்த வீட்டுக்கு சந்தக்கு வாங்கி கொடுக்கின்ற காசு மட்டும்தான் என்றதனைவிடுத்தும், கட்சி என்ற பேரில் ஆட்டுக்கொட்டில் நடத்தியதனை விடுத்தும், பேராளிகள் என்ற  பெயரில் போக்கிரிகளை உருவாக்கி மஞ்சல் பச்சை கலந்த தொப்பியும், சட்டையும் வழங்கி அழகு பார்த்ததை விடுத்தும், கூடவே இருந்தவர்கள் என்று கூறி கொந்தராத்து வாங்கிக் கொடுத்தனை விடுத்தும், ஒரு மண்ணாங்கட்டியும் இந்த எம்பிக்கள் செய்தது கிடையாது. செய்பவர்களையும் விட்டது கிடையாது.

அரசியல் என்பது ஒரு கலையோ அல்லது மாயசால தந்திரமோ அல்ல. இது ஒரு கற்கை அல்லது அறிவு என்று கூறலாம். அதில் தேர்ந்தவர்கள்தான் அதனை செய்யலாம். ஆனாலும் எல்லா தேர்ந்தவர்களும் அதனை செய்ய முடியாது. எவ்வாறாயினும், படித்தவர்களும் படியாதவர்களும் அதில் பங்கேற்கலாம். இவற்றை எமது மக்கள் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவில் தலைமை என்பதுவும் அப்படித்தான். இந்த அரசியல்வாதிகள் கூறுவது போன்று தலைவர்கள் உருவாவது கிடையாது. அது சனநாயக தத்துவமும் கிடையாது. இந்த வங்குரோத்து அரசியல்வாதிகள் சோடிக்கின்ற தோரணைகள்தான் அவைகள். அரசியல் தலமை என்பது எவராக இருப்பினும் சரி, வேறு எந்த தலைமையாக இருப்பினும் சரி அது உருவாவது கிடையாது, உருவாக்கப்படுவதும் கிடையாது. உண்மையில் அது ஏற்கனவே உருப்பெற்றுத்தான் இருக்கிறது. மக்களாகிய எமது வேலை அதனை அடையாளம் கண்டு கொள்வதுதான். நாம் எமது தலைவன் என்று கூறுகிறவன் அடிப்படையில் எமக்கு துரோகம் செய்கிறான் என்றால் அவன் தலைவன் இல்லை. நாம் எதற்காக அவனை தலைவனாக கொண்டோமோ அதற்கு மாற்றமாக நடக்கிறான் என்றால் நாம் தலைவனை அடையாளம் காட்டுவதில் தவறு இழைத்திருக்கிறோம் என்பதுதான் யதார்த்தம். எனவே, நாம் அடுத்த தடைவை நமது உண்மையான தலைவனை சரியான வகையில் அடையாளம் கண்டு கொள்ள முயற்சிக்க வேண்டும்.

நாம் எமது தலைவன் துரோகி எனத் தெரிந்தும் அவனையே மீண்டும் மீண்டும் தலமையாக ஏற்றுக் கொள்வோமனால் அது எமது சமுதாயத்தின் இழிவும் தவறுமே தவிர அந்த துரோகியினது அல்லது குறிப்பிட சில குழுவினது தவறல்ல. ஏனெனில் தான் விதைத்த விதையை அந்த சமுதாயம் சரியாக அறுவடை செய்யவில்லை. தன் வயக்காடு பற்றி இந்த மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை அல்லது புரியவிடாமல் மறுக்கவும் மறைக்கவும் பட்டிருக்கிறார்கள்.     

ஆனால் இன்று எமது ஊர் மக்களின் நிலமை என்ன? மக்கள் அரசியல் என்ற பெயரில் ஏமாற்ற பட்டிருக்கிறார்கள். அரசியல் செய்வது என்பதனையும், அரசியலில் பங்கேற்பது என்பதுவுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர முடியாத அளவுக்கு அவர்களுடைய அறிவு ஒரு சாராய போத்தலுக்குள் ஆயிரம் ருபாய் நோட்டின் சதுர அளவில் முடக்கப்பட்டுள்ளது. வாக்கு இருந்தால் அடையாளம் இடலாம் என்றிருந்த காலம் சென்று இன்று காசு இருந்தால் அடையாளம் இடலாம் என்ற கட்டத்துள் நாம் அடைக்கப்பட்டிருக்கிறோம். மறுவாறாக, சேவை செய்தால்தான் மக்கள் மதிப்பார்கள் என்ற காலம் போய் இப்போது போர்வை போட்டால் மக்கள் எம்மை மதிப்பார்கள் என்ற காலம் அரசியல் தலமைகளிடம் குடியேறிவிட்டது. அரசியல் தலமை என்றால் பொதுமக்களுக்கு சேவையும், நன்னோக்கமும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எம்மிடையே இருந்து மாற்றப்பட்டு வாகனமும் வாட்டசாட்டமும் கூடவே உரக்க கத்த கொஞ்சம் வாயும் இருந்தால் அவன்தான் அரசியல்வாதி என்று கைதட்டும் ஏமாளிகளாக, பலவேளைகளில் கோமாளிகளாகவும் நாம் மாறியிருக்கிறோம். அரசியல் திறமை என்பதனை அளவிடும் கோலாக நாவண்மை, அறிவு, புத்;;;;;திசாதூர்யம், வெளிப்படைத்தன்மை என்பனவெல்லாம் இருந்த காலம் போய் தற்போது ஒரு பெட்டி காசும், வந்துபோக ஒரு காரும், போஸ்டர் ஒட்ட நாலு றோடும் இருந்தால் போதும் அவன் எமது தலைன் என்று ஓங்கி ஒலிக்கும் அளவுக்குத்தான் எமது குரல் வளைகள் அசைந்து கொடுக்கின்றன.

இதெற்கெல்லாம் காரணம் என்ன. எமாற்றுபவனை விட ஏமாறுவதுதான் மூடத்தனம் என்றால் அதனைத்தான் நாம் இவ்வளவு காலமும் செய்திருக்கிறோம் என்று கூற எனக்கு வெட்கமாக இருக்கிறது. அரசியல் என்பது மக்களாகிய எம்மிடம் இருந்து வரவேண்டி விடயம் என்றிருந்தால் நாம் அதனை ஏன் சில சில்லறைகளுக்காக அதனை மற்றவர்களின் மடியில் போட்டுள்ளோம். தெளிந்த குட்டையில் மீன் பிடிப்பதை விட குழம்பிய குட்டையிலதான் மீன்கள் அதிகம் மாட்டும் என்தனை (நாம்) மீன்கள் தெரிந்து வைத்தருக்கிறதோ இல்லயோ, பிடிக்கின்ற இந்த அரசியல் ஏமாற்றுப் பேர்வழிகள் மிக அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர். உமது ஊர் இந்த அளவு சின்னாபின்னப்பட்டு இன்று நட்டாற்றில் இந்த நபர்களினால் விடப்பட்டுள்ளதற்கு காரணம் இந்த சமுதாயத்தில் இருந்த ஒழுங்கு முறை குலைந்திருப்பதால்தான். ஒன்றை இந்த ஊர் மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமுதாயம் ஒழுங்கு முறையின்றி குலைந்து காணப்படும் காலம் வரை இந்த ஊரின் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஊர் மக்களுக்குள் ஒரு உன்னதமான சிவில் ஒழுங்கமைப்பு நிலவுகிற போது நீங்கள் உங்களுடைய தலைமையை சரியான முறையில் அடையாளம் கண்டிருப்பீர்கள் என்பது யதார்த்தமும் நடைமுறையும் கூட.

நான் ஏற்கனவே கூறியது போன்று, நிந்தவூரின் அரசியல் வேறு திசையில் பயணிப்பதற்கான ஒரு ஆரம்பம் இன்று என நான் குறிப்பிட்டதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். எமது மக்கள் அதிகாரம் என்றால் என்ன என்பதனை புரிய ஆரம்பித்திருக்கின்றனர். அதிகாரம் என்றால் தமக்கு இருக்கின்ற அல்லது மற்றவர்கள் தமக்கு அளித்த பலம் என்றுதான் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். உண்மையில் அதன் தத்துவம் வேறு. தமிழில் இலகுவாக விளங்க வேண்டுமாயின், அதிகாரம் என்பது அதி - ஆகாரம் என்பதுவாகும். அதி எனும் சொல்லை விளங்க 'அதிதி' என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதி என்பது மதிப்பு அல்லது மரியாதை எனப் பொருள். 'அதிதி' என்பது மரியதை செலுத்தப்படுகிற நபரை குறிக்கும். ஆகாரம் எனும் சொல்; உதவுதல் அல்லது தொண்டு செய்வதனை குறிக்கிறது. நீங்கள் விளங்கிக் கொள்ள உபகாரம் செய்தல் என்பதனை நினைவில் கொள்ளலாம். ஆகவே, அதிகாரம் என்பது மக்களுக்கென சேவையாற்ற அல்லது தொண்டு செய்யவென மக்களால் அடையாம் காணப்பட்ட அல்லது மதிக்கப்பட்ட நபருக்கு உள்ளவைதான்.

ஆக எனக்கு மகிழ்ச்சி, இன்று இடம்பெற்ற கிரிக்கட் நிகழ்வுக்கு சிவனேசதுரை சந்திரகாந்தன் அதிதியாக அழைக்கப்பட்டும், நாம் பெருமைக்கு மா இடிக்கும் உரலின் இரு உலக்கைளும் அவ்விடத்தில் இல்லை. இப்பொழுது அவர்களிடம் இருப்பது 'காரம்' மட்டும்தான்J அப்படியென்றால், எமது மக்கள் இன்று எமது எம்பிக்களுக்கு இருக்கின்ற 'அதி' என்தனை களட்டிவிட்டிருக்கிறார்கள். மதிப்பும் மரியாதையும் அவர்களுக்கு தவறுதலாக மக்கள் வழங்கியதாகத்தான் நான் கருதுகின்றேன்;. ஏனெனில் அவர்கள் எமது சமுதாயத்தில் தலைவர்களாக தவறுதலாக அடையாளம் காணப்பட்டவர்கள். நீங்கள் அது எப்படி என்று கேட்கலாம். தலைவர்கள் உருவாவதும் கிடையாது, உருவாக்கப்படுவதும் கிடையாது. சமுதாயம் இயல்பாகவே தலைவர்களை பெற்றெடுக்கிறது. சமூகத்தின் பணி என்னவென்றால் அவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்வதுதான். அதனை எனது சமுதாயம் மீண்டும் செய்யும் என நம்புகின்றேன். அந்த தலைவனுக்கு

1 இலட்சியமும் குறிக்கோளும் இருக்க வேண்டும்
2 ஏதிர்பாராது இடம்பெறகிற அத்தனை தடைகளையும் தாண்டிச் செல்லும் சாதூர்யம் இருக்க வேண்டும்.
3 வெற்றியையும் தோல்வியையும் கச்சிதமாக முகாமை செய்யும் பக்குவத்தை அறிந்திருத்தல் வேண்டும்.
4 தீர்மானங்களை எடுப்பதில் துணிகரம் இருக்க வேண்டும்.
5 கண்ணியமானவனாக இருக்க வேண்டும்
6 வேலையையும் வெற்றியையும் பகிர்ந்து கொள்பவனாக இருக்க வேண்டும்
7 பொது வாழ்வில் எத்தருணத்திலும் வெளிப்படையானவனாக இருக்க வேண்டும்.

இவையெல்லாம் நான் கூறுவது தேர்தல் காலத்தின் போது அளவிடுவதற்கல்ல. தேர்தலின் பின்னர் அளவிவிடுவதற்கு.

நீங்கள் நினைக்கின்றீர்கள் இப்படி ஒரு தலைவனை எப்படி உம்மக்கள் கண்டுகொள்வார்கள் என. நான் கேட்கிறேன், இருக்கின்ற உலக்கைகளிடம் இவற்றில் ஒன்றுகூட இல்லையே என்று. அப்ப எப்படி மா இடிப்பது??? இருக்கிற உரலயும் கொடுத்துட்டு கிறைண்டர் ஒன்டு வாங்கினா கரண்டுல போட்டு இடிக்கலாம். அப்படி இல்லாட்டி மா இடிக்க பக்கத்து வீட்டுக்குத்தான் போகணும். பக்கத்து வீட்டுலயும் எத்தன நாளக்கி இடிக்கிற. ஒலக்க இருக்கும் வரக்கித்தான் ஒரலுக்கு வேல. ஒரல் இருக்கப்போய்த்தான் இந்த ஒலக்கையும் இங்க இருக்குது. இதுதான் மெய்யான அரசியல், எமது மக்கள் இப்போதாவது புரிந்து கொள்கிறார்கள்.  
Copyright @ SriLankan Muslims Identity | Floral Day theme designed by SimplyWP | Bloggerized by GirlyBlogger